×

நாய்கள் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து விழுந்து வாலிபர்கள் பரிதாப பலி: தனியார் கம்பெனி ஊழியர் சாவு

ஸ்ரீபெரும்புதூர், ஆக.14: நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 வாலிபர்கள், சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியானார்கள். ஒரகடம் அடுத்த குன்னவாக்கத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (24). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தமிழ்ராஜ் (23). நேற்று மதியம் இருவரும் பைக்கில் ஒரகடம் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கை அலெக்ஸ் பாண்டியன் ஓட்டினார். பண்ருட்டி அருகே கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய்கள் சண்டை போட்டு, குறுக்கே ஓடியது. இதனால், தடுமாறி கீழே விழுந்த 2 பேரும், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா மருவத்தூர் கிராமத்தை சோ்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சரவணன் (23). படப்பை அருகே சாலமங்கலம் பகுதியில் உள்ள அப்பளம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சரவணன், தனது பைக்கில் தன்னுடன் வேலை பார்க்கும் ராஜா, பெருமாள் ஆகியோருடன் வஞ்சுவாஞ்சேரிக்கு பைக்கில் சென்றார். அப்போது, சாலையை கடந்தபோது, எதிரே வந்த வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். மேற்கண்ட சம்பவங்கள் குறித்து சோமங்கலம், மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...