×

மறைமலைநகர் அருகே பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலம் மீட்பு: கொலையா? விசாரணை

செங்கல்பட்டு, ஆக. 14: மறைமலைநகர் அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இவர், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மறைமலைநகர் அடுத்த பேரமனூர், புத்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி மல்லிகா (48). தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர், திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுக்கு முன் ஜெயராமன் மனைவி மல்லிகாவை பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்தது.  இந்நிலையில், பூட்டப்பட்டு இருந்த வீட்டில் இருந்து நேற்று மாலை கடும் துர்நாற்றம் வீசியது.

சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, மல்லிகா அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மல்லிகா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்துக்காக அவரை கொலை செய்தனரா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...