குமாரபாளையம்,ஆக.14: குமாரபாளையத்தில் நடந்த தேசிய இளையோர் பூப்பந்தாட்ட போட்டியில் ஆடவர், மகளிர் போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய அளவிலான 64வது இளையோர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற இரட்டையர் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி, ஆந்திர அணியை வென்றது. ஆந்திர அணி இரண்டாமிடமும், கேரளா மற்றும் தெலங்கானா அணிகள் மூன்று மற்றும் நான்காமிடத்தை பெற்றது. இரட்டையர் மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி, ஆந்திர அணியை வென்று முதலிடம் பெற்றது. ஆந்திர இரண்டாமிடமும், மகாராஷ்டிரா மூன்றாமிடத்தையும் பெற்றது. இந்த இரண்டு போட்டிகளில் வென்றதால் தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.