குமாரபாளையம், ஆக.14: குமாரபாளையத்தில் ஜவுளி அதிபர் வீட்டில் 70 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(38). இவரது மனைவி கிருத்திகா ராணி(35). இவர்கள் ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்த 10ம்தேதி சீனிவாசன் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தங்கள் வீட்டில் வைத்திருந்த 70 பவுன் நகைகளை காணவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி விசாரணை மேற்கொண்டார். சீனிவாசனின் வீட்டில் திருட்டு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள நகைகளில் மீதமுள்ளவை அங்கேயே உள்ளது. மேலும் நகை வைத்திருந்த இடத்தில் இருந்த பணம், வெள்ளி பொருட்கள் அப்படியே உள்ளது. இதனால், உண்மையிலேயே நகை திருடு போனதா என போலீசார் குழப்பமடைந்து உள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.