நாமகிரிப்பேட்டை, ஆக.14: நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டி அருகே சண்டி கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வாரத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பிடிகாசு வழங்குவது வழக்கம். பக்தர்கள் பிடிகாசு வாங்கினால் செல்வம் பெருகும், தீராத கடன்களில் இருந்து விடுபடவும், செய்யும் தொழில் மேன்மை அடையும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடி அமாவாசை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பிடிகாசை திருவெள்ளறை பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் பட்டாச்சாரியார், வினோத் பட்டாச்சாரியார், ரங்கநாதர் தேவஸ்தானம் ராம் பட்டாச்சாரியார் ஆகியோர் வழங்கினர்.இந்த பிடிக்காசு வாங்கும் நிகழ்ச்சியில் 108 மூலிகைகளை கொண்டு கணபதி ஹோமம், செல்வம் செழிக்க அஷ்டலக்ஷ்மி ஹோமம், நரசிம்ம ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இதில் நாமக்கல், சேலம், ஆத்தூர், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை சண்டி கருப்பசாமி கோயில் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கோயில் பூசாரிகள் சிறப்பாக செய்தனர்.