×

விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்து ராமன்துறை மீனவர் உடல் கொச்சி கடலில் மீட்பு

புதுக்கடை, ஆக.14: கொச்சி அருகே நடுக்கடலில் குமரி மாவட்ட மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் ராமன்துறையை சேர்ந்த மீனவர் ஏசுபாலன் உடல் மீட்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த அருள்தாசன் மகன் ஏசுபாலன், அவரது தம்பிகள் ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ராமன்துறையை சேர்ந்த அல்லேசி மகன் யாக்கோபு, ரெங்கநாதன் மகன் யுகநாதன், ஜோசப் மகன் ஷாலு, ரகுநாதன் மகன் எட்வின், முள்ளூர்துறையை சேர்ந்த ஜேசையா மகன் சகாயராஜ், சீமோன் மகன் சகாயராஜ், மணக்குடியை சேர்ந்த லிட்டல் ராஜ் மகன்கள் வாட்சன், மரியராஜ், கேரளா முனம்பம் மல்லியங்கரை சேர்ந்த ஷிபு, மேற்கு வங்கத்தை சேர்ந்த பீபுல், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்க்கார் ஆகிய 14 பேர் கேரள மாநிலம் கொச்சி, முனம்பம் துறைமுக பகுதியில் இருந்து ‘ஓசியானிக்’ என்ற படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.கடந்த 7ம் தேதி அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியதில் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் ராமன்துறையை சேர்ந்த அல்லேசி மகன் யாக்கோபு(57), ரங்கநாதன் மகன் யுகநாதன்(45), முள்ளூர்துறையை சேர்ந்த சீமோன் மகன் சகாயராஜ்(50) ஆகிய 3 பேர் இறந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய எட்வின், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்க்கார் ஆகியோர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதர 9 பேர் மாயமாகினர்.விபத்து நடந்த இடத்தில் ஆழ்கடலில் கடந்த 11ம் தேதி இரவு கொச்சி, மல்லியங்கரையை சேர்ந்த சிஜூ(42) என்பவரது உடல் மீட்கப்பட்டது. இதர 8 பேரையும் தேடி வந்த நிலையில் ராமன்துறையை சேர்ந்த அருள்தாசன் மகன் ஏசுபாலன் உடல் 12ம் தேதி மீட்கப்பட்டது.

முனம்பம் துறைமுக பகுதிக்கு அக்ஷயா என்ற படகில் கொண்டுவரப்பட்ட உடலை பார்த்து அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். பின்னர் உடல் எர்ணாகுளம் மருத்துவமனைக்கு கொண்டு செலப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கி காணாமல் போன மேலும் 7 பேருக்கான தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ராமன்துறையில் தொடரும் காத்திருப்பு போராட்டம்
மீனவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ராமன்துறையில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றும் தேவாலயம் அருகே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். தேசிய மீனவர் சங்க மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன், ஐஎன்டியுசி நிர்வாகிகள் கிறிஸ்துராஜ், செல்வராஜ் மற்றும் அருள்தாஸ், வில்பிரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...