×

புதுவையில் தி.வி.க. மறியல்- 55 பேர் கைது

புதுச்சேரி, ஆக. 14:  திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் 55 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச துரோக வழக்கத்தில் தமிழக அரசு கைது செய்ததை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்யக்கோரியும் புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் திரண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடை ராயன், தமிழர் களம் பிரகாஷ், ராவணன் படிப்பகம் அபிமன்னன், தந்தை பெரியார் தி.கழகம் வீரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமுருகன் காந்தி மீதான பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 55 பேரை பெரியகடை இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...