புதுச்சேரி, ஆக. 14: புதுவையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்பவர்களுக்கு செல்போன், கேமிரா எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் நாளை வாகனங்கள் செல்ல போக்குவரத்து காவல்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி புதுவையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வரும் விஐபிக்கள், பொதுமக்கள் எந்தெந்த சாலை வழியாக வர வேண்டும், எங்கு தங்களது வாகனத்தை பார்க்கிங் செய்ய வேண்டும், மேலும் எவற்றுக்கு எல்லாம் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து (வடக்கு- கிழக்கு) எஸ்பி வீர.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற அனைவரும் வம்பாகீரப்பாளையம் சாலை வழியாக விழா திடலுக்கு வர வேண்டும். கார் அனுமதி பெற்ற வாகனங்கள் வம்பாகீரப்பாளையம் சாலை வழியாக வந்து விழா நடைபெறும் மைதானத்தின் வடக்கு பக்கம் கதவு எண்-1 வழியாக உள்ளே வந்து தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவற்றை நிறுத்த வேண்டும். கார் அனுமதி பெறாத அழைப்பாளர்களின் வாகனங்கள் அனைத்தும் வம்பாகீரப்பாளையம் சாலையில் விழா நடைபெறும் மைதானத்திற்கு தெற்கு பக்கத்தில் கதவு எண்-2 அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். அணிவகுப்பில் பங்கேற்கும் காவலர்கள் மாணவ மற்றும் மாணவியர் தங்களது சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வம்பாகீரப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும். கைப்பை, உணவு பொருட்கள், கண்ணாடி- பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கேமிரா மற்றும் செல்போன் போன்ற பொருட்களை எடுத்துவர அனுமதியில்லை. விழாவுக்கு வருபவர்களின் அழைப்பிதழ்கள் பரிசீலனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு கருதி சோதனை செய்யும்போது காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ெபாதுமக்கள் தங்களுடன் கைப்பை, உணவு பைகள், கண்ணாடி- பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கேமிரா, செல்போன் மற்றும் வேறு எந்த பொருட்களையும் கொண்டு வர அனுமதியில்லை. கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அன்று காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மதியம் 4 மணி முதல் மறுநாள் காலை 7.30 மணி வரையும் சைக்கிள் உள்பட எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டது. கடற்கரை சாலை தூமாஸ் வீதி மற்றும் பாரதி பூங்கா, கவர்னர் மாளிகையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களை தவிர எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது.
மாறாக புதுச்சேரி சட்டசபை மற்றும் பொது மருத்துவமனைக்கு மேற்கே உள்ள பெரிய வாய்க்கால்கள் மீது நிறுத்தப்பட வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கும் பொருட்டு விழாவுக்கு வரும் பொதுமக்கள் விழா நடக்கும் இடத்திலும், கடற்கரை சாலையிலும் மற்றும் பாரதி பூங்கா அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குப்பை மற்றும் இதர பொருட்களை எறிய வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.