கடலூர், ஆக. 14: கடலூர் குண்டு உப்பளவாடி ஊராட்சி பகுதியின் நகர்நல சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளடக்கிய கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.குண்டு உப்பளவாடி நெடுஞ்சாலையை முற்றிலும் நெடுஞ்சாலை துறை பொறுப்பில் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குண்டு உப்பளவாடி நகராட்சி பகுதியில் விடுபட்ட நகர் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். மஞ்சக்குப்பம் நகர் பகுதி மழை வெள்ள நீர் முழுவதும் வெளியேறும் வடிகால் பகுதியாக குண்டு உப்பளவாடி அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதி முழுவதும் மழை நீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.பெண்ணை நதி ஓரத்தில் கரை பலப்படுத்தி உள்ள பகுதியில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சாலை அமைத்து போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.