×

குமரியை சேர்ந்த பிரபல ரவுடி திடீர் சாவு : மாருதி அடிகளார் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு

நாகர்கோவில், ஆக.13 : நாகர்கோவில் அருகே உள்ள கீழ கிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (34). இவர் மீது சுசீந்திரம் அருகே நடந்த மாருதி அடிகளார் கொலை வழக்கு, கோட்டாரில் நடந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் போலீஸ் ரவுடி பட்டியலிலும் இருந்து வந்தார். ஜாமீனில் இருந்து வந்த இவர் சமீபத்தில் சென்னை சென்று இருந்தார். நேற்று முன் தினம் காலை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர், நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுரை அருகே ரயில் வரும் போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மதுரை ரயில் நிலையத்தில் டாக்டரை வரவழைத்து பரிசோதனை நடந்தது.

ஆனால் சிறிது நேரத்தில் கணேசன் இறந்தார். இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மதுரைக்கு சென்றனர். கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கணேசன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது பற்றி மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு