காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, 4 நாட்களாக நகராட்சி நிர்வாகம் தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி வாயிலாகவும் எச்சரிக்கை அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. மேலும், வெள்ளம் புகுந்த வீடுகளில் வசித்தவர்கள் பலரும், தங்கள் உடமைகளை நிவாரண முகாமில் வைத்து விட்டு வீடுகள் இருக்கும் பகுதியிலேயே நடமாடி வருகின்றனர்.
இவர்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து அபாயம் குறித்து விளக்கி வெளியேறுமாறு எச்சரித்த போதிலும், அங்கிருந்து வெளியேறாமல் வெள்ளம் புகுந்த வீடுகளிலேயே இருக்கின்றனர். நிவாரண முகாம்களில் உணவு வேளையின் போது கூட்டமாக காணப்படும் மக்கள், அதன் பின்னர் மீண்டும் வெள்ளம் புகுந்த வீடுகளுக்கே சென்று விடுகின்றனர்.