பாடாலூர், ஆக. 13: பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெறுகிறது.
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. ஆகஸ்ட் 6ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆகஸ்ட் 7ம் தேதி முதல் நேற்று வரை மாரியம்மன் அன்ன வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பால் குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இரவில் பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இன்று(திங்கள்கிழமை) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாய் கிழமை) மஞ்சள் நீர் விழாவுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக ஜூலை 30ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.