×

தசைகளை தாக்கும் மையோசைடிஸ்...

நன்றி குங்குமம் தோழி

தீர்வு சொல்லும் இயன்முறை மருத்துவம்!

நம் எல்லோருக்குமே பிடித்தமான ஒரு நடிகை சமந்தா. அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள Myositis எனும் நோய் ஒருவருக்கு எப்படி ஏற்படுகிறது? அதனால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தானுடல் தாக்கி நோய்...

Myositis என்பது ஒரு அரிய வகை ஆட்டோ இமியூன் நோய் (Auto Immune Disease). அதாவது, நம் உடலில் ஏதேனும் ஒரு தொற்றுக்கிருமி நுழைந்தால், உடனே அதனுடன் நம் உடலின் ‘பாதுகாப்பு மண்டலம்’ (Immune System) சண்டையிட்டு வெல்லும். ஆனால், ஆட்டோ இமியூனில் நம் உடலின் பாதுகாப்பு மண்டலம், நம் உடலின் சில திசுக்களையே ‘ஆபத்து உண்டாக்கும் திசுக்கள்’ என நினைத்து தாக்கி நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இவ்வாறு பல தானுடல் தாக்கி நோய்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் Myositis.

மையோ என்றால் தசைகளை குறிப்பது. எனவே தசைகளில் ஏற்படும் அழற்சியால் உடல் வலி, பெரிய மூட்டுகளில் வலி வருவது, தினசரி வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படுவது போன்ற கூட்டு அறிகுறிகளை உடையதே Myositis என்பது.

காரணம்...

தன்னுடலே தன் நல்ல செல்களை தாக்குவதற்கு இதுதான் காரணமென இதுவரை கண்டறியப்படவில்லை. மரபணு மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இருப்பினும் இந்த ஆராய்ச்சி இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

நோயின் தன்மை...

இரண்டு பாகமாக சுழற்சி முறையில் இந்த நோய் தாக்கும்.

1.நோயின் அறிகுறிகள் குறைவாகத் தோன்ற ஆரம்பித்து அதிகமாக மாறும். எவ்வளவு நாள் அல்லது மாதம் இவ்வாறு இருக்குமென தெரியாது. இந்த பாகம் முடியும் வரை மருத்துவக் கண்காணிப்பும், மருந்து மாத்திரைகளும் அவசியம்.

2.படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புவர். அறிகுறிகள் மறையத் தொடங்கும். இதுவும் எத்தனை மாதம் நீடிக்கும் எனத் தெரியாது. நோயாளி நோய் பாதித்த ஒருவராக தெரிய மாட்டார். எல்லோரையும் போல் சகஜமாக உடல் மற்றும் மன அளவில் அவரால் இயங்க முடியும்.பின் மீண்டும் முதல் பாகம் தோன்றும். பின் இரண்டாம் பாகம். இதுவே வாழ்க்கை முழுவதும் மாறி மாறித் தோன்றும்.

அறிகுறிகள்...


*பெரிய மூட்டுகள் அருகில் உள்ள தசைகளான தொடை தசைகள், இடுப்பு, கண்டங்கால், தோள்பட்டை தசைகள் பாதிக்கப்படும்.

*கொஞ்சம் தூரம் நடந்தாலே அதிகப் படியான களைப்பு உண்டாவது.

*கைகளினால் சாதாரணப் பொருட்களைக் கூட எடுப்பதற்கு சிரமம்  ஏற்படும். உதாரணமாக, ஒரு சொம்பு நீர் எடுத்து அருந்துவது.

*கீழே உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படுவது.

*மாடிப்படி ஏறி இறங்குவது கடினமாக மாறும்.

*தினசரி வேலைகளைச் செய்வதே பெரும் சாகசமாக இருக்கும்.

*நான்குக்கும் அதிகமான தசைகளைத் தாக்கும் வகையான Poly Myositis என்பது பெண்களை அதிகம் பாதிக்கக் கூடியது. அதிலும் குறிப்பாக முப்பது முதல் அறுபது வயது வரை உள்ள பெண்கள்.

*Dermatomyositis எனும் வகையில், மேல் சொன்ன அறிகுறிகள் உடன் சருமத்தில் பொறிப் பொறியாக (Rashes) வரும். இந்த வகை பாதிப்பு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் ஏற்படும்.

*Inclusion Body Myositis எனும் வகையில் மேல் உள்ள அறிகுறிகளுடன் உணவு விழுங்கும் தசைகளும் பாதிப்படையும். இதனால் உணவு விழுங்க முடியாமல் சிக்கல் ஏற்படும். இந்த வகை Myositis ஐம்பது வயதை தாண்டியுள்ள ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.

கண்டறிவதற்கு...


*சாதாரண உடல் வலி ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும். இதையும் தாண்டி மாதக்கணக்கில் உடல் வலி இருந்தால், சிறுசிறு வேலையாக இருந்தாலும் செய்ய சிரமப்பட்டால் அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம்.

*ஆரம்பக்கட்டமாக ரத்தப் பரிசோதனையை பரிந்துரைப்பர்.

*தசைகளை, சருமத்தை பரிசோதிக்க பையோப்சி போன்ற பரிசோதனைகள் செய்து கண்டறிவர்.

மருத்துவம்...

முதல் பாகம்

*நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் முதல் பாகத்தில் மருத்துவர்கள்

அறிவுரையின் படி மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில், அறிகுறிகள் தீவிரமடைந்து நிலைமை மோசமாக மாறும்.

*போதிய ஓய்வும் கட்டாயம் அவசியம்.

*நோயின் தன்மையை நன்றாகப் புரிந்து ஏற்றுக்கொண்டால் பெரும் மன அழுத்தங்களை தடுக்கலாம்.

*அறிகுறிகளை குறைக்க மருந்துகள் வழங்குவார்கள்.

*முதல் பாகத்தின்போது தினசரி வேலைகளே சவாலாக இருக்கும் என்பதால் மிகவும் குறைந்தபட்ச உடற்பயிற்சிகளையே இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

*முடிந்தவரை எழுந்து நடப்பது, அவ்வப்போது உட்காருவது, கை கால்களை அசைப்பது போன்ற எளிமையான வேலைகளை செய்யவேண்டும். இதனால் தசைகள் சூம்பிப் போவதையும், பலவீனமாவதையும் தடுக்கலாம்.

இரண்டாம் பாகம்

*நோயின் தன்மை, உடலின் பலம் போன்றவற்றை சோதித்து இயன்முறை மருத்துவர்கள் உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பர். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்துவருவது அவசியம். அவ்வப்போது இயன்முறை மருத்துவர் தசைகளை பரிசோதித்து அடுத்தக்கட்ட உடற்பயிற்களை வழங்குவார்கள்.

*நீச்சல், நடனம், நடைப்பயிற்சி செய்வது, ஜாகிங் செய்வது போன்றவற்றை இயன்முறை மருத்துவர்கள் ஆலோசனை மூலம் செய்யலாம். ஏனெனில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தசைத்திறன் அளவு அவ்வப்போது மாறுபடும்.

*உடற்பயிற்சி செய்வதின் மூலம் தசைகள் அடுத்த தாக்குதலின்போது மேலும் மோசமாகாமல் இருக்கும்.

*மூச்சுப் பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

எனவே, மையோசைடிஸ் என்பது அரிய நோய் என்பதால் யாரும் கவலை கொள்ளவேண்டாம். மேலும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தக்கமுறையில் இயன்முறை மருத்துவரின் துணையோடு நம்பிக்கையாய் வாழ்வை வாழலாம்.

Tags :
× RELATED சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!