×

தூங்கி கொண்டிருந்த இளம்பெண் மூச்சு திணறடித்து கொலை

சாமியார்மடம், ஆக. 9: சாமியார்மடம் அருகே குடும்ப தகராறில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மூச்சு திணறடித்து கொன்றுவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தை அடுத்த பள்ளியாடி குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஷைலா (28). பள்ளியாடி பழையக்கடை பகுதியை சேர்ந்தவர் பக்ளி தேவானந்தம் (35). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.பக்ளி தேவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவர் மீது சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வழக்கு செலவுகளுக்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஷைலா புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் கணவன், மனைவி இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்தனர். மேலும் குழந்தைகள் நலன்கருதி குடும்பத்தில் பிரச்னை இல்லாமல் வாழ்க்கை நடத்துமாறு அறிவுரை கூறி இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் இருந்த பக்ளி தேவானந்தம் அன்று இரவு ஷைலா தூங்கும் போது தலையணையால் மூச்சு திணறடித்து அவரை கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து பக்ளி தேவானந்தம் தலைமறைவானார்.நேற்று காலை இந்த தகவல் அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் ஷைலாவின் வீட்டில் திரண்டனர். அப்போது அவர் இறந்து கிடந்ததை பார்த்தனர். அருகில் குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தன. இது குறித்து உடனடியாக தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து ஷைலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயற்சித்தனர். ஆனால் அவரது உடலை எடுக்க ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தினர். பின்னர் பக்ளி தேவானந்தத்தின் பெற்றோரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.இதைத் தொடர்ந்து போலீசார் ஷைலாவின் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான பக்ளி தேவானந்தத்தை தேடி வந்தனர். இந்நிலையில், திங்கள்சந்தை அருகே கல்லுகூட்டத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டில் பதுங்கி இருந்த பக்ளி தேவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தன் மீது ஷைலா காவல் நிலையத்தில் புகார்  கொடுத்த ஆத்திரத்தில் அவரை இரவு தூங்கும்  போது தலையணையில்  முகத்தை மூடி மூச்சு திணறடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி