புதுச்சேரி, ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுவையில் திமுக கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. திமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு ஆங்காங்கே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக திகழ்ந்த திமுக தலைவர் கருணாநிதி 7ம்தேதி காலமானார். இது திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதி மறைவைெயாட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வேண்டுகோளுக்கிணங்க புதுச்சேரியில் திமுக கொடிகள் அனைத்தும் நேற்று அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் லப்போர்த் வீதியிலுள்ள தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமையில் மலர்மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் செஞ்சி சாலையிலுள்ள வடக்கு மாநில திமுக அலுவலகத்திலும் திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் கட்சி அலுவலகங்கள் மட்டுமின்றி முக்கிய சந்திப்புகளில் திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆங்காங்கே கண்ணீர் அஞ்சலி பேனர்களும் திமுக சார்பில் வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.