×

29வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறு, சிறுதொழில் கோரிக்கை நிறைவேறவில்லை

கோவை, ஆக.7: ஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது ஆலோசனை கூட்டம் கடந்த 4ம் தேதி டெல்லியில்  நடந்தது. இதில் தமிழகத்தின் குறு, சிறு தொழிற்துறையினரின் கோரிக்கை ஒன்று கூடநிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னை ஆய்வு செய்ய துணை குழுஅமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதிலும் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் தொழில்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாடு  முழுவதும் ஒரு முனை வரி விதிப்பான ஜிஎஸ்டி கடந்த ஆண்டு ஜூலையில் அமலுக்கு  வந்தது. இதில் விதிக்கப்பட்ட வரி முறைகளில் மாற்றங்கள் குறித்து, ஜிஎஸ்டி  கவுன்சில் அவ்வப்போது கூடி விவாதித்து, வரிகளை குறைத்தும், அதிகரித்தும்  வருகிறது. 29வது கவுன்சில் கூட்டம் கடந்த 4ம் தேதி டெல்லியில் நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தலைமையில் நடந்தது.  இதில் தமிழக தொழில்துறையினரின் நிலுவை கோரிக்கைகள் ஒன்று கூட நிறைவேறவில்லை. அதற்கு மாறாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் தொழிற்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (கொசிமா)  தலைவர் சுருளிவேல் கூறியதாவது: கடந்த மாதம் 21ம் தேதி டெல்லியில் நடந்த 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும், தொழிற்துறையினரின் முக்கிய கோரிக்கையான, ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்கவில்லை. சமீபத்தில் கடந்த 4ம் தேதி நடந்த 29வதுகூட்டத்தில் இக்கோரிக்கை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறைவேறவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தினாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
29வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய நிதி இலாகா, ராஜாங்க அமைச்சர் சிவபிரசாத் சுக்லா தலைமையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, மற்றும் பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படவுள்ள குழுவிலும் தமிழக நிதி அமைச்சரையோ, துணை முதல்வரோ சேர்க்கப்படவில்லை. இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கொசிமா தலைவர் சுருளிவேல் கூறினார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ‘ஜவுளித்துறையில் மேற்கொள்ளப்படும் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீத வரி  விதிப்பை 5 சதவீதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றினர். அதுபோல்  இன்ஜினியரிங் துறை ஜாப் ஒர்க்கிற்கு விதிக்க வேண்டும். பம்ப்செட் உற்பத்திக்கான மூலப்பொருளுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை உள்ளது. அதிகபட்சமான இத்தகைய வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.’ என்றார்.  
 கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் (கௌமா) தலைவர் சாஸ்தா  ராஜா கூறுகையில், ‘வட மாநிலத்தில் தயாரிக்கப்படும் ஆட்டா சக்கி  கிரைண்டருக்கு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில்  உற்பத்தியாகும் வெட் கிரைண்டருக்கும் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக  மாற்ற வேண்டும். ஜிஎஸ்டியின் 30வது கவுன்சில் கூட்டம் வரும் செப்டம்பர் 28,  29 தேதிகளில் கோவாவில் நடக்கிறது. அதில் கோவை தொழில்துறையினரின்  கோரிக்கைகள் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’  என்றார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்