ஏரல், ஆக. 7: பெருங்குளம் சிவன் கோயிலில் அம்மனுக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் சிறப்பு அபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடம் முன்பிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு சிவன் கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம், பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்டனர். பின்னர் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
ஏற்பாடுகளை இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சரோஜா ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வைகுண்டம் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரமதி, பெருங்குளம் பொருப்பாளர் பாக்கியலெட்சுமி மற்றும் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் சாயர்புரம் அருகேயுள்ள பட்டாண்டிவிளை அம்மன் கோயிலிலும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு பிராத்தனை நடத்தினர். இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வைகுண்டம் ஒன்றிய பொறுப்பாளர் பேச்சியம்மாள், மாவட்ட பொதுச் செயலாளர் சரோஜா செய்திருந்தனர்.