தூத்துக்குடி, ஆக. 7: தூத்துக்குடி மடத்தூர் ரோடு முத்துநகரில் ஓடையைக் கடக்க நிரந்தர பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மடத்தூர் முத்துநகர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் 34வது வார்டுக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் சிறுமழை வந்தாலே தண்ணீர் தேங்கிவிடும். கடந்த 2015ம் ஆண்டில் வெள்ளம் சூழ்ந்த போது பார்வையிட்ட அப்போதையை அமைச்சர், விரைவில் நிரந்தர பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை. இதனிடையே குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையின் குறுக்கே அமைந்துள்ள ஓடையை கடக்க குழாய் அமைத்து பொதுமக்கள் தற்காலிகமாக அமைத்துள்ள பாலத்தை மாநகராட்சியினர் அகற்றிவிட்டதால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். எனவே, ஓடையை கட்ட உடனடியாக இங்கு நிரந்தர பாலம் அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் 10 ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாத சாலை முற்றிலும் உருக்குலைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 8 மின்கம்பங்கள் இருந்தும் ஒரு தெருவிளக்கு கூட பொருத்தப்படவில்லை. இதனால் பிரதான சாலையில் வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடக்கிறது. விஷஜந்துகளின் நடமாட்டமும் இரவில் உள்ளது. எனவே, இங்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளனர்.