நன்றி குங்குமம் டாக்டர்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி ஆரோக்கியமாக வைக்க உதவும் ஐந்து பொருள்தான் 5ஜி எனப்படும் இஞ்சி (Ginger), பூண்டு (Garlic), பச்சை மிளகாய் (Green chili), கிரீன் டீ (Green tea), நெல்லிக்காய் (Gooseberry). இவை எவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பார்ப்போம்.
இஞ்சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இஞ்சி உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் இதயம் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கவும் உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் வலிக்கு நிவாரணமாக உள்ளது. எல்.டி.எல்., என்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை சமநிலையில் வைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, சமையலில் அடிக்கடி இஞ்சியை பயன்படுத்தலாம். அதேவேளையில் அளவாகவும் பயன்படுத்த வேண்டும்.
பூண்டு வைட்டமின் சி, பி6, செலினியம், மாங்கனீசு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் பூண்டில் நிறைந்துள்ளன. இது கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
பச்சை மிளகாய் இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் ஈ சத்து, சருமத்தில் எண்ணெய்ப் பசையை தக்க வைக்கிறது. மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்பின்ஸ் உற்பத்தியை சீராக்கி, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியா தன்மைகள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சியை தவிர்க்கவும் உதவுகிறது.
கிரீன் டீ உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதுடன், உடல்எடையை குறைக்கவும் உதவுகிறது இந்த கிரீன் டீ. மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வை தவிர்க்கவும் உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தை மேம்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு பாதிப்பை குறைக்கும்.
நெல்லிக்காய் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துதல், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், கொலஸ்ட்ராலை சமன்செய்தல், செரிமானத்துக்கு உதவுதல் உட்பட பல்வேறு நன்மைகளை நெல்லிக்காய் அள்ளித்தருகிறது.
தொகுப்பு : ரிஷி