நன்றி குங்குமம் டாக்டர்
தலையில் வேர்வை படிவதால் ஒருவகை ஃபங்கஸ் உருவாகி பொடுகு ஏற்படுகிறது. மேலும், அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால்கூட பொடுகு ஏற்படலாம். மன இறுக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகியவை காரணமாகவும் பொடுகு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளைநிறத்தில் திட்டுத் திட்டாக காணப்படும் பொடுகு, கூந்தலின் அழகை கெடுப்பதுடன் தலையில் அரிப்பை ஏற்படுத்துகிறது.
பொடுகு இருப்பதற்கான முக்கிய அறிகுறி தலையில் அரிப்பு ஏற்படுவது தான். உங்கள் வீட்டுச் சமையலறையில் இருக்கும் சில பொருட்களுக்கு பொடுகை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
தேங்காய் எண்ணெய்: எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம்.
வேப்பெண்ணெய்: தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.
எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்
வெங்காயச் சாறு: ஃபங்கஸ் கிருமிகளை அழிக்க வெங்காயச் சாறுபயன்படும்.
லெமன் கிராஸ் எண்ணெய்: லெமன் கிராஸ் ஆயில் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவினால், பொடுகு நீங்கும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய்ச் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு: முட்டையின் வெள்ளைக் கருவை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.
கற்றாழை: கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.
பூண்டு பேஸ்ட் : பூண்டை விழுதாக்கி தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.
வெந்தயம்: இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தலையில் தடவலாம்.
தொகுப்பு : ரிஷி