சந்தனமும் மருந்தாகும்

நன்றி குங்குமம் டாக்டர்

தென்இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் மரம் சந்தனம். இது தமிழகக் காடுகளில்  தானே வளரக்கூடியது. இது துவர்ப்புச் சுவையும், நல்ல நறுமணமும் உடையது.

கணுப்பகுதியிலும் நுனிப்பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும்.  உலர்ந்த நடுக்கட்டைதான்  நறுமணம்  உடையது. மருத்துவப் பயனுடையது.இதை வீடுகளில் வளர்த்தால்  அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். அது நன்கு வளர்வதற்குப் பக்கத்தில் ஒரு மரம் துணையாக  இருக்க வேண்டும். 2-3  ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். மரம் நன்கு வளர்ந்து   20 ஆண்டுகளுக்குப் பின்தான் முழுப்பலன் கிடைக்கும்.

சந்தனம் சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேகநீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும், சிறுநீர் தாரை எரிச்சல் தணிக்கும். குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறுமணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புகள், ஊதுவத்திகள், அலங்காரப் பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன்படுத்தப்பட்டாலும், கிருமி நாசினியாக செயல்படும். உடல்  அழற்சியை  குறைக்கும் தன்மை உடையது.சந்தனக் கட்டையை  எலுமிச்சம் பழச்சாற்றில்  இழைத்துத்  தடவி வர,  முகப்பரு, தவளைச் சொறி,  சொறி,  படர் தாமரை,  வெண்குட்டம், கருமேகம், வெப்பக்கட்டிகள்  குணமாகும்.  

சந்தனக்கட்டையை பசும்பாலில் இழைத்துப் புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர  வெட்டைச்சூடு, சிறுநீர்ப்பாதை ரணம், அழற்சி  ஆகியவை  தீரும். சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300மி.கி.  நீரில்  போட்டுக் காய்ச்சி  பாதியளவாக காய்ச்சி வடிக்கட்டி 3 வேளை  50 மி.லி. குடிக்க  நீர்க் கோர்வை, காய்ச்சல்,  மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும்.

சந்தனத் துண்டுகளை நீரில் ஊறவைத்து மைய  அரைத்து சுண்டைக்காயளவு  பாலில்  கலந்து இரவு  மட்டும்  20 நாள்  உட்கொள்ள  உடல் தேறி, நோய் தீரும்.

சந்தன  எசன்ஸ்  2-3  துளி  பாலில்  கலந்து குடிக்க  உடல் குளிர்ச்சி  பெறும்.

தொகுப்பு : பா. கவிதா

Related Stories: