×

பேச்சிப்பாறையில் 42 மி.மீ மழை பதிவு குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், ஜூன் 21: குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. கடை வரம்பு பகுதிகள் வரை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 12.70 அடியாக இருந்தது. அணைக்கு 791 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 775 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 73.80 அடியாக இருந்தது. அணைக்கு 524 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 120 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 15.75 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 70 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-2ல் 15.35 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. 103 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

பொய்கையில் 14.60 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 6 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 42 மி.மீ மழை பதிவாகி இருந்தது. சிற்றார்-1 பகுதியில் 40.4 மி.மீ மழை காணப்பட்டது. பெருஞ்சாணி 18.4, சிற்றார்-2ல் 37, மாம்பழத்துறையாறு 9, பாலமோர் 31, மயிலாடி 4.2, கொட்டாரம் 5.2, ஆனைக்கிடங்கு 15, கன்னிமார் 9.4, அடையாமடை 18, புத்தன் அணை 21.2, திற்பரப்பு 20 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.இதற்கிடையே குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் சில நேரங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் 10 முதல் 12 அடி உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...