×

சிக்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி கோரிக்கை

நாகை, ஜூன் 21: சிக்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை கலெக்டருக்கு இந்து மக்கள் கட்சி  மாவட்ட பொது செயலாளர் பார்த்திபன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில்   நாகை மாவட்டம் நாகை, திருவாரூர் சாலையில் சிக்கல் கிராமம் அமைந்துள்ளது. சங்கமங்கலம், பொரவச்சேரி, ஆவராணி புதுச்சேரி, செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட கிராம மக்களும் கூடும் இடமாக சிக்கல் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் நாகை நகரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இந்த மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக உள்ளதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே சிக்கலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நாகை- திருவாரூர் மெயின்ரோட்டில் சிக்கலில் 1991ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு சொந்தமான பிரச்சார் பாரதி ஒலிபரப்பு நிலையம் இயங்கி வந்தது. தற்போது ஒலிபரப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிக்கல் ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த பிரச்சார் பாரதி ஒலிபரப்பு நிலைய கட்டிடம் தற்போது காலியாக இருப்பதால் அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் பொதுமக்கள் பயன்பெறுவர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...