×

குண்டர் தடுப்பு சட்டத்தில் சித்தேரி பாண்டியன் கைது

கடலூர், ஜூன் 21: தொடர் சாராய கடத்தலில் ஈடுபட்டு வந்த சித்தேரி பாண்டியன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனையந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் கடந்த 4ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேப்பூர் அருகே உள்ள சித்தேரி பகுதியை சேர்ந்த பாண்டியன்(38) என்பவர் பைக்கில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்த போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
சாராய வியாபாரி பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர் மீது ராமநத்தம், சிறுபாக்கம், விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் விழுப்புரம் மாவட்டம் கீழ்குப்பம் காவல் நிலையங்களில் 6 சாராய வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் பாண்டியனின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் சாராய வியாபாரி பாண்டியன் ஓராண்டு மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...