சேந்தமங்கலம், ஜூன் 21: புதன்சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டு சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும் குட்டிகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் வருகின்றனர்.
நேற்று கூடிய சந்தைக்கு அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனால் சந்தையில் ஆடுகள் விலை சரிந்தது. கடந்த வாரம் ₹5,300க்கு விற்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் ₹5,100க்கும், ₹3,600க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு ₹3,400க்கும், பிறந்த ஒரு மாதமே ஆன கிடா மற்றும் பெண் குட்டி ஆடு ₹900க்கும் விற்பனையானது.