×

குந்தாரப்பள்ளியில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், ஊரக வளர்ச்சி துறை மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பத்திரப்பதிவு துறை, வருவாய் துறை, வங்கி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி இன்று (21ம் தேதி) கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கிராமத்தில் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமிற்கு வரும்போது ஏற்கனவே மனைப்பிரிவினை வரன்முறைப்படுத்த விண்ணப்பித்த இணையதள பதிவுக்கான ஒப்புகை ரசீது நகல், உரிமையாளரின் புகைப்பட அடையாள சான்று, மனைப்பிரிவு வரைபடம், விற்பனை ஆவணம், மனையை விற்றவர் அல்லது உரிமையாளர் பெயரில் உள்ள புகைப்படம், பட்டா, சிட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள், கிரயம் பெற்ற நாளில் இருந்து இதுநாள் வரை இணையதள வில்லங்க சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது