கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரியில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 203 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கிருஷ்ணகிரி தாலுகாவிற்குட்பட்ட 82 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் கடந்த 1ம் தேதி துவங்கியது. ஜமாபந்தி நிகழ்ச்சியில் 82 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய அனைத்து கிராம கணக்கு பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அனைத்து பதிவேடு, பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் பொது அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிடப்பட்டன.
நேற்றைய நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரியில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இதுவரை 922 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 72 பேர் மனு அளித்தனர். இதில் தகுதி வாய்ந்த 58 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்களும், பட்டா மாற்றம் குறித்த 199 மனுக்களில், 52 மனுதாரர்களுக்கு அதற்கான ஆணைகளும், உட்பிரிவு பட்டா மாற்றம் கேட்டு 260 நபர்கள் மனு அளித்ததில் 30 நபர்களுக்கு உட்பிரிவு பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், முதியோர் உதவித்தொகை கேட்டு 305 நபர்கள் மனு அளித்ததில் 94 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், பிறப்பு சான்று கேட்டு 3 நபர்கள் விண்ணப்பித்ததில், 3 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றும், இறப்பு சான்று கேட்டு விண்ணப்பித்த 4 நபர்களுக்கு இறப்பு சான்றும், மின்னனு குடும்ப அட்டை 6 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 203 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் கன்னியப்பன், தனி தாசில்தார் பாலசுந்தரம், துணை தாசில்தார்கள் சத்யா, சக்திவேல், தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர்கள் செந்தில்குமார், பூபதி, கிராம நிர்வாக ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன், சரவணன், பிச்சுமணி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.