மேலூர், ஜூன் 21: மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ நிதி பணிக்கான டெண்டரை பெறுவதில், அமமுகவினர் மற்றும் அதிமுகவினர் ஏற்பட்ட போட்டியால், டெண்டர் விடுவது ஒத்திவைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இந்தாண்டுக்கான எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து 22 பணிக்களுக்கு ரூ.65 லட்சத்திற்கான டெண்டர் நேற்று விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டெண்டர்களை எடுக்க அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே போட்டி ஏற்பட்டது.
இதனால், இருதரப்பு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெளியில் பூட்டிய போலீசார், உரிய ஆவணங்களை காட்டியவர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பால், அமமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக கட்சியினர் யூனியன் அலுவலகம் அருகே காத்திருந்தனர். இதனால், அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனை தொடர்ந்து பிடிஓ ரத்தினகலாவதி, நிர்வாக காரணத்தினால் டெண்டர் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டினார். இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய சுற்றி காலையில் இருந்து தொடர்ந்த பதட்டம் விலகியது.