×

சிப்காட் அருகே லாரி மீது கார் மோதிய விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு 6 பேருக்கு தீவிர சிகிச்சை

சிப்காட், ஜூன் 21: சிப்காட் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நடந்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(55). மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 18ம் தேதி தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டை அருகே உள்ள சைனாம்பட்டறைக்கு வந்தார். நேற்று முன்தினம் மதியம் சீயான் மலையில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மாதனூருக்கு காரில் 10 பேருடன் திரும்பிக் கொண்டிருந்தார். சேர்க்காடு கூட்ரோடு அருகே சென்றபோது நிலை தடுமாறிய கார், சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் குமார்(55), அவரது மனைவி முத்துராணி(50), மகன் கார்த்தி(35) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த மேல்பாடி, வாலாஜா போலீசார் படுகாயமடைந்த கார்த்தியின் மனைவி மெர்சி(28), மகன்கள் மெர்லின்(3), டேவிட்சன்(2), ராஜேஷ்குமார் மனைவி சங்கரி(28), மகள் மதுமிதா(5), மகன் சந்தோஷ்குமார்(7), ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பத்தை சேர்ந்த மெகர்சிலின் மனைவி தமிழ்ச்செல்வி(30) ஆகிய 7 பேரை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மதுமிதா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். சிறுமி இறப்பின் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ேமலும் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆபத்தான நிலையில் இருந்த டேவிட்சன் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக பணம் கட்ட வேண்டும் என்ற நிலையால் மீண்டும் வேலூர் அரசு மருத்துவமனைக்கே மாற்றப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...