×

சாயல்குடி கடல் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க எதிர்ப்பு

சாயல்குடி, ஜூன் 20: சாயல்குடி கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி பகுதியின் மன்னார் வளைகுடா கடல் பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், மூக்கையூர் முதல் ஏர்வாடி வரை சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆழமான பகுதியான கீழமுந்தல், மேலமுந்தல், வாலிநோக்கம் கடல்களில் நாட்டு படகில் சென்றும், தூண்டில் மூலமும் மீன் பிடித்து வருகின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து தற்போது மீனவர்கள் கடலுனக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக இப்பகுதியைச் சேர்ந்த மொத்த மீன் வியாபாரிகள், தனியார் மீன் கம்பெனியினர் சிலர் தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை வரவழைத்து, அதிக கூலி வழங்கி, அதிக குதிரை திறன் வேகம் கொண்ட ஆயில் இன்ஜின் படகுகள், தடை செய்யப்பட்டபைபர் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். இதனால் சாயல்குடி பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என புகார் கூறுகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகா ரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயல்குடி பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை