சீர்காழி,ஜூன் 20: சீர்காழி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமலும், மருந்து, மாத்திரைகள் இல்லாமலும் நோயாளிகள், அவதியடைந்து வருகின்றனர். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு வந்த பெண்கள் திடீர் முற்றுகையில் ஈடுப்பட்டனர்.சீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சை பெறவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6 மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.