அரியலூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ஆதார் எண்ணுடன்2,500 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் விஜயலட்சுமியிடம் கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று அளித்தனர்.திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி மே 4ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து.இருப்பினும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருமானூர்,திருமழபாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கத்தை கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் தொடங்கினர். மணல் குவாரி வேண்டாம் எனக் கூறி இலவச அழைப்பு 1100ஐ மேற்கண்ட கிராம மக்கள் தொடர்பு கொண்டும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொள்ளிட நீராதர பாதுகாப்பு இயக்கத்தினர், அங்கு கலெக்டர் .விஜயலட்சுமியை சந்தித்து, ஆதார் எண்ணுடன்2,500 பேர் கையெழுத்திட்ட மனுக்களை அளித்தனர்.மேலும் இதன் நகல்கள் ஆளுநர்,தமிழக முதல்வருக்கு அனுப்பட்டது.