×

செரிமானக் கோளாறு சரியாக 6 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலகட்டத்தில்  ஒருவருக்கு  ஆற அமர அமர்ந்து   பொறுமையாக  உணவு உண்பதற்கு  எல்லாம் நேரமில்லை என்பதே  நிதர்சனமான உண்மை. எனவே,  உணவை ஏனோதானோ என வாயில் அடைத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.  இதனால்,  செரிமானக் கோளாறுகளைச்  சந்திக்கின்றனர். அதிலிருந்து   விடுபடவும், செரிமான பிரச்சனைகளை  சரி செய்யவும் எளிய 6 வழிகளை பார்ப்போம்:

குளிர்ந்த நீர்

உணவு உண்டபின்  உடனே  குளிர்ந்த நீரை  அருந்துவது முற்றிலும் தவறான  ஒன்று.  இப்படி செய்வதனால்  உண்ட உணவு நீரின் குளிர்ச்சியால்  விரைவில்  செரிமானமாகாமல்  இடையூறு  செய்யும்.  எனவே,  உணவு எடுத்துக் கொண்டவுடன்,ஒரு சிப் அளவுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும்  குளிர்ந்த நீராக இல்லாமல்,  சாதாரண அரை வெப்ப நிலையில் உள்ள நீரையே உணவுக்குப் பின் அருந்த வேண்டும்.

நின்றுகொண்டே உண்பது

இப்போது எல்லாம் தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து உண்பது என்பது  மிகவும்  அரிதாகிவிட்டது.   காலச்சூழலுக்கு ஏற்றவாறு நின்றுகொண்டே தங்கள் உணவை அவசர அவசரமாக உண்டு முடித்து விடுகின்றனர்.  இவ்வாறு நின்று கொண்டே உண்பதால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும், இது  வயிற்றுப்பகுதியில் வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை ஏற்படுத்தி செரிமானக் கோளாறை  உண்டுபண்ணும். எனவே,   முடிந்தளவு  அமர்ந்து  உணவை எடுத்துக் கொள்வதே  செரிமானப் பிரச்னை வராமல் தடுக்கும்.   

வேகமாகச் சாப்பிடுதல்

உணவினை நன்கு மென்று உண்ணாமல் வேக வேகமாக உண்ணுவதும்,  விழுங்குவதும் செரிமானப் பிரச்னைக்கு  மிக  முக்கியமான காரணமாகும்.   இவ்வாறு  உணவை  நன்கு  மென்று  விழுங்காமல்  அவசரமாக  விழுங்கும்போது,  வயிற்றுக்குள் செல்லும் உணவானது  அரைபடுவதற்கு  நீண்டநேரம்  எடுத்துக் கொள்வதால்,  செரிமானக் கோளாறு ஏற்படுகிறது.  மேலும்,  அவசரமாக  உண்பதால்  உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இதுமட்டுமின்றி, வேகமாக சாப்பிடுவது உடலில் உள்ள  இன்சுலினையும் பாதிக்கும், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, உணவைச் சரியாக மென்று உண்ணுவதே சிறந்தது.  இப்படி செய்யும்போது உணவில்  உள்ள  ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்பட்டு  நன்கு   செரிமானமாகும்.   இதைத்தான்,  நம் முன்னோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம் என்று கூறியுள்ளனர்.

தவறான உணவுகளைச் சேர்த்தல்

சில வகை உணவுடன் ஒரு சில உணவை சேர்த்து உண்ணக்கூடாது. அப்படி உண்டால், வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். அந்த  இரு வகை உணவுகளும் ஒன்றோடு ஒன்று  ஒட்டாமல்,  அஜீரணக் கோளாறை  ஏற்படுத்துகிறது.  இதனால்,  வயிறு உப்புசம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும். உதாரணமாக,நெய்யுடன் வாழைப்பழத்தையும், பாலுடன் முலாம் பழத்தையும் சேர்த்து  உண்ணக்கூடாது என்று கூறப்படுகிறது.

குறைந்த உணவு

நம் உடலுக்குத் தேவையான அளவு உணவை நாம் தினமும்  எடுத்துக் கொள்வது அவசியமாகும்.  ஆனால், அதிகம்  சாப்பிட்டால்  உடல் எடை கூடிவிடும் என்று  குறைவாக சாப்பிடுவதையே விரும்புகின்றனர்.  அதிலும் மிக முக்கியமாக பெண்கள்தான் மிகவும் குறைவான உணவை உட்கொள்கின்றனர். ஆனால், சரியான அளவில் நாம் உணவினை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. மேலும்,  உடலுக்கு சரியான அளவு உணவு கிடைக்காத போது,  உணவுக் குழலில்  வாயு ஏற்பட்டு அதுவும் செரிமானப் பிரச்னைகளுக்கு  வழிவகுக்கும்.  எனவே  அன்றாட  தேவைக்கான  சரியான  அளவிலான  உணவை  எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு உணவுகளை  ஒதுக்குதல்

சமீபகாலமாக, பெரும்பாலானோர் கொழுப்பு உணவுகளை  தவிர்த்து  விடுகின்றனர்.  காரணம்,  அதிக கொழுப்பு உள்ள  உணவுகளை  எடுத்துக் கொண்டால்,  உடல்  பருமனாகி விடும் என்ற பயமே. ஆனால்,  உடலுக்குத்  தேவையான, சரியான அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். எனவே, கொழுப்பு உணவுகளை  முற்றிலும்  தவிர்க்காமல், அளவோடு  சேர்த்துக்கொள்வது  செரிமானத்துக்கு உதவும்.   உண்மையில் ஆயுர்வேதத்தின்படி நமது உடல் சரியாகச் செயல்பட சில ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை என்று அறியப்பட்டுள்ளது.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Tags :
× RELATED வளரும் குழந்தைகளும்… அவர்களின் வளர்ச்சிகளும்!