×

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்எல்சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்ற போது, அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்னையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்எல்சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்.

என்எல்சி நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அதுகுறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன். என்எல்சி நிறுவனமும், அதன் செயல்பாடுகளும் கடலூர் மாவட்ட மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரானது. அடக்குமுறைகள், அர்த்தமற்ற தடைகள் ஆகியவற்றின் மூலம் என்எல்சிக்கு எதிரான உணர்வுகளை தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் அனைத்து அடக்குமுறைகளையும் முறியடித்து மக்கள் சக்தி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Anbumani ,NLC , Anbumani condemns ban on talking about NLC in farmers' grievance meeting
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...