பாட்டியாலா: கொலை வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 10 மாத தண்டனைக்குப் பின் பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலையானார். பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சித்து, கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில் காரில் சென்ற போது ஏற்பட்ட தகராறில் குர்னம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் இறந்தார்.
இந்த கொலை வழக்கில் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். 10 மாதம் சிறை தண்டனை அனுபவித்த சித்து நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே நேற்று விடுவிக்கபட்டார். நீண்ட இழுபறிக்கு பின்னர் மாலை 5.53 மணி அளவில் பாட்டியாலா சிறையிலிருந்து சித்து விடுதலையாகி வெளியில் வந்தார். சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ‘சித்து வாழ்க’ என கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.