×

கலாஷேத்ரா இயக்குநர், துணை இயக்குநர் நாளை 12 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: மாநில மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர், நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் 3 பிரிவுகளில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா நிர்வாகம் மாணவிகள் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கலாஷேத்ரா பாலியல் பிரச்னை குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா திடீரென கலாஷேத்ரா கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார். ஆனால், விசாரணையில் மாணவிகளின் புகாரை முழுமையாக கேட்காமல், மிரட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்திய மாணவிகள், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இதனால், கல்லூரிக்கு வரும் 6ம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் திடீரெ 300க்கும் மேற்பட்ட மாணவிகள் திரண்டு நியாயம் கேட்டு கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, கல்லூரியின் இயக்குநர், ஆர்டிஓ, காவல் துறையினர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தொடர்ச்சியாக 30 மணி நேரத்துக்கும் மேலாக மாணவிகள் போராடி வந்தனர். இந்நிலையில், நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் இயக்குநர் மற்றும் தலைமைப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி   ஒன்றிய கலாசார அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக மாணவிகள் புகார் அனுப்பினர்.

அதில் இயக்குநர் மாணவிகளை உருவ கேலி, சாதி ரீதியாக திட்டுவது போன்ற செயல்கள் செய்வது, புகார் அளித்தால் திட்டுவது போன்ற செயல்களை செய்கிறார் என குறிப்பிட்டு இருந்தனர். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மாணவிகள் புகார் அனுப்பினர். இதனை தொடர்ந்து  தமிழ்நாடு மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கலாஷேத்ரா வழக்கை கையில் எடுத்து, விசாரணை நடத்தியது. எனினும், மாணவிகள் தரப்பில் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் கலாஷேத்ரா பவுண்டேஷனில் பயின்று, பாதியில் கல்லூரியை விட்டு நின்றதாக  புகாரில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கல்லூரியில் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை வெளியில் கொண்டுவர நினைப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக கலாஷேத்ரா கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்ற பிறகு, தனக்கு நேரிட்ட விமர்சனங்கள் காரணமாக, அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு படிக்க விரும்பவில்லை. ஆனால் குடும்ப வற்புறுத்தலின் காரணமாக முதுகலைப் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தேன். தனது வகுப்பின் பேராசிரியராக இருந்தவர் தனக்கு கொடுத்த தொல்லையின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கொள்ள முடிவு எடுத்தேன், அதன் பிறகு கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்தபோது அந்த ஆசிரியர் தவறான நோக்கில் தன்னை அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடன நிகழ்ச்சியின்போது முக்கிய கதாபாத்திரத்தில் தான் ஆடியதாகவும், ஆனால் பேராசிரியர் தன்னை மாற்றி, வேறு ஒருவரை நியமனம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் முன்னாள் கல்லூரியின் இயக்குநர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பதிவு வெளியிட்டதால், தனக்கு நடந்த சம்பவத்தை வெளிக்கொண்டுவர இதுவே தக்க சமயம் என நினைத்து புகார் அளித்தேன் என பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கல்லூரியில் படிப்பது பலரின் கனவாக இருக்கின்ற சூழலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பேராசிரியர் செயலின் காரணமாக பறிபோனது என தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து நீதி கிடைத்துள்ளது, இந்தப் புகார் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் தான் நேரில் வரத் தயார் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, உதவி பேராசிரியர் ஒருவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை கைது செய்வது குறித்து போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில்,கலாஷேத்ரா இயக்குநர், துணை இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை(திங்கள்) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் பலர், இயக்குநர் மற்றும் துணை இயக்குநருக்கு பல முறை மனு அளித்துள்ளனர். இதில் நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் அளிக்க  மாநில மகளிர் ஆணையம் சார்பில்  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாளை மதியம் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில்  நிர்வாகம் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பபடவுள்ளது.

Tags : Deputy Director ,Khalashethra , Kalashetra director, deputy director to appear for hearing by 12 noon tomorrow: State Women's Commission action order
× RELATED ₹14 கோடி செலவில் தொடங்கியது வலை பின்னும் கூடம்