வால்பாறை : வால்பாறை டவுனில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், சிறுத்தை அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறி உள்ள காட்டுப்பன்றிகள், வி.ஓ.சி நகர், இந்திரா நகர், வாழைத்தோட்டம், ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வருகிறது. பள்ளி நேரங்களில் சாலையில் ஒய்யாரமாய் நடந்து போஸ் கொடுத்து செல்லும் பன்றிகளால் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
இந்நிலை தொடர்வதால், தாசில்தார் அலுவலகம் மற்றும் சார்பு பகுதிகளில் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும், காட்டுப்பன்றி கூட்டத்தில் நாட்டு பன்றிகள் உள்ளதா? என ஆய்வு செய்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். சில தினங்களுக்கு முன் காட்டுப்பன்றியை தாசில்தார் அலுவலக வளாகத்தில் சிறுத்தை வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.