செய்யூர்: சீவாடி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் சீர்வரிசை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் சீவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், புதிய மாணவர்கள் சேர்க்கையோடு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
மேலும், இந்த ஊர்வலத்தின்போது பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சார்பில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களான சாக்பீஸ், தூசி துடைப்பான், துடைப்பம், பினாயில், பக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி ராஜேஷ், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி ஆசிரியை பிரின்சி நன்றி கூறினார்.