பூந்தமல்லி: போரூர் அடுத்த ஐய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், ரூ.40.32 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளுக்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பத்மாவதி நகர் பகுதியில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்க சிஎம்டிஏ மேம்பாட்டு நிதி ரூ.40.32 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டது. இந்த சாலை பணிகளை அமைப்பதற்கான பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது.
இதில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரன், துணை சேர்மன் உமா மகேஸ்வரி வந்தே மாதரம், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி, உஷா நந்தினி, குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜனார்த்தனன், மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், காஞ்சிபுரம் மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு வைத்தார்.
முன்னதாக, ஐயப்பன்தாங்கல் ஊராட்சி 12வது வார்டு, முத்து நகரில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உஷா நந்தினி எத்திராஜ் ஒன்றிய மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் முத்துநகர் மெயின் ரோடு, முத்துநகர் குறுக்கு தெரு, ராமையா நகர் முதல் தெரு, மற்றும் மூன்று குறுக்கு தெருக்கள் உள்ளிட்ட சாலைகள் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற செயலர் கோதண்டராமன், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.