மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே உள்ள சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் விநாயகமூர்த்தி (35). இவர், கடமலைப்புத்தூரில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த செல்போன்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கடையில் இருந்த 27 செல்போன்கள் மற்றும் ரூ.55,000 திருடுபோயிருந்தது. அதன் மதிப்பு ரூ.4.5 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.