சென்னை: திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி கொடுத்த புகாரில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் மாணவ - மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி தனது தோழியுடன் நேற்று மாலை திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு வந்தார். பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது புகார் அளித்தார். படிக்கும் காலத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்று போலீசார் வழக்கை அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து மகளிர் போலீசார், உதவி பேராசிரியர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஐதராபாத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை சென்னைக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.