சென்னை: ராயப்பேட்டை அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்த நீண்ட சட்டப்போராட்டம், இன்னும் இந்த போராட்டம் முடியவில்லை. ஓபிஎஸ் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்துவார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜ, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகள் இருக்கின்றன. அவர்களில் யாருடனாவது கூட்டணி வைப்போம், அது சாத்தியமில்லை என்ற நிலை வந்தால் தனியாகவும் போடியிடுவோம். அதிமுகவில் இன்னும் மியூசிக்கல் சேர் போட்டி நடக்கிறது. இதுவரை பழனிசாமி வாலியை போல வெற்றி பெற்று இருக்கிறார். ராமாயணத்தில் வாலி வில்லன் கதாபாத்திரம், சுக்ரீவனின் ராஜ்யம் மற்றும் மனைவியை அபகரித்தவர்.
அதனால் பொதுச்செயலாளர் ஆனாலும் பழனிசாமியால் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ ஆக முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நடந்த குழப்பங்களுக்கு மத்தியில் ஆள்பவர்கள் தான் காரணம். முதலில் அவர்கள் தான் இருவரை சேர்த்து வைத்தார்கள். மீண்டும் அவரகள் நினைத்தால் தான் ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய முடியும். தஹிக்கு நஹி தான் தமிழ்நாட்டில் அனைவரின் கருத்து. தயிர் என தமிழில் இருக்கிறது, இணைப்பு மொழியான ஆங்கிலம் பெயரும் இருக்கும் போது தஹி என்ற இந்தி தினிப்பு தேவையற்றது. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.