தூத்துக்குடி: சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: பொன்னியின்செல்வன் 2வது பாகம் எனக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு தியேட்டரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்து இருப்பது, மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது மனவேதனையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது எதிர்க்கட்சியின் வாதமாக இருக்கும். அது சரியாக இருக்கிறதா?, இல்லையா? என்பது அரசுக்கு தெரியும். தமிழ்நாடு போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தடை சட்டமாக வேண்டும். ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி, ஆன்லைனில் பலவிதமான சூதாட்டம் நடந்து வருகின்றன. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்து தடை விதிப்பது அவசியம். சமத்துவ மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.