சென்னை: வேளச்சேரியில் ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (31), தேவகிஷ் ஜூஸ் (28), தேவராஜ் (28) ஆகியோர் சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் கல்லூரிக்கு சென்றனர். சச்சின் குமார் ஜெயின் 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர், ‘என்னை மன்னித்து விடுங்கள், நான் நலமாக இல்லை’ என ஆங்கிலத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். பிற்பகல் தேவகிஷ் ஜூஸ் வீட்டுக்கு வந்தபோது, மின்விசிறியில் பெட்ஷீட்டால் தூக்கு மாட்டி சச்சின் குமார் ஜெயின் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.