சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 2021-22ம் ஆண்டு நியாய விலைக் கடைகளை நடத்தி நஷ்டம் அடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பண மானியமாக ரூ.300 கோடி வழங்கவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இழப்பை ஈடுசெய்ய முன் மானியமாக ரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. இதற்காக கடை வாடகை, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட செலவை சமாளிக்க, அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானிய தொகை, குறித்த காலத்தில் வழங்கப்படாததால், கூட்டுறவு சங்கங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது 150 கோடி ரூபாய் மானியத்தை விடுத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ஒவ்வொரு சங்கத்துக்கும், அதன் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.