×

ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!

சென்னை: ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்க மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர் என கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்; சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும், பல பகுதிகளில் காலம் கடந்து கிடைத்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் புதிதல்ல.

கடந்த 4 நாட்களாகவே சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் வழங்க மறுத்து உற்பத்தியாளர்கள் நடத்தி போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் தான் ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கும், குறித்த காலத்தில் கிடைக்காததற்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆவின் பாலின் பயன்பாடு தவிர்க்க முடியாதது ஆகும். குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்க மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இத்தகைய சூழலில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமலும், உரிய காலத்திலும், அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Govt should ensure availability of cow's milk without shortage: Ramadoss, founder of Pamaga!
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...