×

மாடு மேய்க்க சென்றபோது குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

தர்மபுரி, மே 23: தர்மபுரி அருகே மாடு மேய்க்க சென்றபோது குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி செட்டிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் பிரதாப் (9). அங்குள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையொட்டி, அருகில் உள்ள மாமா பெரியண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். பெரியண்ணன் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது பிரதாப்பும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள கரடிகுட்டையில் தண்ணீர் குடிக்க ஒரு மாட்டை பிரதாப் அழைத்து சென்றுள்ளார். தண்ணீரை பார்த்ததும் மாடு திமிறிக்கொண்டு ஓடியது. இதில் மாட்டின் கயிற்றை பிடித்திருந்த பிரதாப் குட்டைக்குள் இழுத்து செல்லப் பட்டார். குட்டை சேற்றில் சிக்கிய பிரதாப் தண்ணீரில் மூழ்கினார்.

வெகுநேரமாக பிரதாப்பை காணாமல் உறவினர்கள் தேடினர். இதில் சிறுவன் பிரதாப் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா