×

முத்துப்பேட்டையில் அலையாத்திகாடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் பற்றாக்குறையால் அவதி-கூடுதல் படகுகளை இயக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடுகளை சுற்றிப்பார்க்க படகுகள் பற்றாக்குறை உள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் அவதியைப்போக்க கூடுதல் படகுகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும்.

இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,88,591 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.
இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும்.

ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். அலையாத்திகாடுகளின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து முத்துப்பேட்டைக்கு வந்து செல்கின்றனர். தற்பொழுது வெயில்காலம் என்பதால் மக்கள் விடுமுறை மற்றும் ஓய்வான நேரத்தில் அருகில் இருக்கும் இந்த அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா வர துவங்கி உள்ளனர்.

இதனால் படகுத்துறை களைக்கட்டியது. வனத்துறை அலுவலகத்தில் 1998ம்ஆண்டு  வரை முன்பு வன அலுவலர், வனவர், வனக்கப்பாளர், வன காவலர் என 20க்கும் அதிகமாக அலுவலர்கள் பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது பத்து அலுவலர்கள் மட்டுமே உள்ளனர்.வனத்துறை சார்பில் படகுகள் உள்ளது. இதில் இரண்டு படகுகள் பழுதாகிவிட்டது. அதனால் இரண்டு படகுகள் மட்டுமே இயங்கி வருகிறது. படகு ஓட்டுவதற்கு 2பேர் மட்டுமே உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல போதுமான படகுகள் இல்லாததால் இங்குவந்து பலமணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பல சுற்றுலா பயணிகள் நீண்டதூரம் வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். அதனால் பழுதடைந்த படகுகளை சீரமைக்க வேண்டும், கூடுதலாக படகுகளை வனத்துறை வாங்க வேண்டும். படகுக்கு என கூடுதல் படகு ஓட்டிகள் நியமனம் செய்ய வேண்டும்.

படகுஏறும் ஜாம்புவானோடை படகுதுறையின் அருகேயே டிக்கெட் கவுண்டர் அமைக்க வேண்டும். அதேபோல் படகில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகளை படகில் வைத்துக்கொண்டே வனத்துறையினர் சுற்றிக்காண்பித்து ஒரு மணிநேரத்தில் திரும்ப அழைத்து வருகின்றனர். இதனால் முழு திருப்தி இல்லாமல் வந்து செல்கிறனர். எனவே காலஅவகாச நேரத்தை கூட்டி உரிய அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupet , Muthuppet: Due to lack of boats to tour the undulating forests in Muthupet, tourists
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...