×

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தாய் பலி மணமேடையில் கண்ணீருடன் கலங்கி நின்ற மணப்பெண்-தாயாக இருந்து காப்பேன் - மணமகன் உருக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் மகளின் திருமணத்துக்கு முதல்நாள் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் உடல் இரவோடு, இரவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருமணமும் திட்டமிட்டபடி கண்ணீர் கலந்த சோகத்துடன் நடந்து முடிந்தது. நாகர்கோவில் கீழ பெருவிளையை சேர்ந்தவர் சண்முகவேல். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகளுக்கும், எள்ளுவிளையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று (27ம்தேதி) திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாட்டில் மணமகள் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இரு நாட்களுக்கு முன்பே, மணமகள் வீட்டில் உறவினர்கள் குவிந்தனர். மகள் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களை சாந்தி நன்றாக கவனித்து வந்தார்.

நேற்று முன் தினம் மதியம் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் சாந்தி தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக சாந்தியை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சாந்தியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டதும் மணமகள் உள்பட குடும்பத்தினர் கதறி அழுதனர். கலகலப்பாக மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்த திருமண வீடு மட்டுமல்ல, அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மணமகன் வீட்டாருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆசாரிப்பள்ளம் போலீசார்  தகவல் அறிந்து வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஊர் பிரமுகர்கள், உறவினர்கள் கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க வேண்டாம். சாந்தியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், இந்த திருமணம் நிச்சயம் நடக்க வேண்டும்.

எனவே திருமணத்தை திட்டமிட்டப்படி நடத்துவோம். சாந்தியின் உடலை பிரேத பரிசோதனை செய்து இரவோடு இரவாக அடக்கம் செய்து விடுவோம் என முடிவு செய்தனர். இதற்கிடையே இரவு 7 மணி வரை ஆனதால், பிரேத பரிசோதனை நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக ஊர் பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளை தொடர்பு  கொண்டனர்.
எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், மாநகராட்சி மேயர் மகேஷ் கவனத்துக்கும் இந்த விவகாரம் சென்றது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த மேயர் மகேஷ், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு இரவோடு, இரவாக பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இளம்பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

மகள் திருமணத்துக்காக இறந்து போன சாந்தி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். எனவே அந்த திருமணம் நிற்க கூடாது. எனவே இரவே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத்,  பிரேத பரிசோதனைக்கு தேவையான காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து  செய்ய வேண்டும் என டி.எஸ்.பி. நவீன்குமாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில், ஆசாரிப்பள்ளம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக நடவடிக்கைகளை எடுத்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன் பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டு, நாகர்கோவில் புளியடியில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டு இரவிலேயே தகனம் செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் அஸ்தி கரைக்கப்பட்டது.

 பின்னர் நேற்று காலையில் திட்டமிட்டப்படி திருமணம் நடைபெற்றது. கண்ணீருடன் மணமேடையில், மணமகள் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அவரது கரத்தை பிடித்து, உனக்கு தாயாகவும் இருந்து கவனித்துக் கொள்வேன். நீ கலங்காதே என்று கண்ணீருடன் மணமகன் ஆறுதல் கூறினார். உறவினர்களும் கண்ணீருடன் ஆறுதல் கூறி சென்றனர். உற்சாகமாக நடந்தேற வேண்டிய மண நிகழ்வு, கண்ணீர் கலந்த சோகத்துடன் நடந்தேறியது. மணமகளுக்கு உறவினர்கள் ஆறுதல் கூற முடியாமல் குடும்பத்தினரும் கலங்கி நின்றது, அனைவரையும் கலங்க வைத்தது.

Tags : Nagarkovil , Nagercoil: The body of a woman who died of electrocution on the first day of her daughter's wedding in Nagercoil was conducted post-mortem overnight.
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...