×

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்

சென்னை: மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது. சென்னை காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு  நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 என்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை.

ஆனால், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7,752 மது போதையில் வாகனம் ஓட்டிய அபராத வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் சென்னை போக்குவரத்து காவல் சார்பில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 25.03.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 775 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.80,35,500 விதி மீறியவர்களால் செலுத்தப்பட்டன.
 
கடந்த இரண்டு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 7,286 மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.7,53,97,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 359 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

Tags : Chennai , Over Rs 7.5 crore fined in drunk driving cases: Chennai Police data
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...